கம் கும் ஜம்.
நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௫ (125)
சமீபத்தில் தினமும் எழுதுவது பற்றி காரசாரமான பல விவாதங்கள் முகநூலில் சுழன்றது. 10-20 என்று தினப்படி எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நறுக்கென நாலு வரிகளில் கவிதை எழுதி, ட்விட்டரில் டிரென்ட் ஆக்குபவர்களும் உண்டு. ஆடிக்கும் அம்மாவாசைக்கும் தூசி தட்டும் ரகம் ஒரு ஜாதி. புரியாததை எழுதி புலவர் பெயர் வாங்கும் பலர்.
என் போல் சோம்பேறிகளுக்கு எந்த நியதியும், தர்மமும், வெக்கமுமில்லை. புதியதொரு நண்பருடன், இணைய தமிழ் பற்றி ஒரு நீண்ட உரையாடல், எதேர்ச்சியாக நிகழ்ந்தது. பேசும் சுவாரஸியத்தில் நானும் வலையில் எழுதுவேன் (எழுதினேன்) என்று சொல்ல, அவர் இணைப்பை கேட்க, நான் எழுதி பல காலமாச்சு என்று நெழிய… இந்த பதிவும் பிறந்தது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர இலக்கிய வாசகனாக மாற முயற்சி செய்த நான், எழுதவும் முற்ப்பட்டேன். என்ன என்னமோ எழுதி உள்ளேன், இன்று திரும்பி வாசித்து பார்த்தால் சிரிப்பி தான் மிச்சம். முதிர்சியின்மை வெளிச்சமாக தெரியும் எழுத்துக்கள். சொல்லித் தர ஆள் இல்லாத குறை. குரு மூலம் செல்லும் பாதையே செம்மையானது. ஒரு ஏகலைவன் தான் உள்ளான். மீதி போர் வீரர்கள் அனைவரும் முறையே பயின்றவர்கள். தெளிவு குரு உரு சிந்தித்தல் என்கிறது திருமந்திரம். குருவாய் வருவாய் குகனே. நிற்க.
அன்று நான் எழுத பயன்படுத்தியது Google Transliteration input tool for Desktop. இன்று அது இணைய வடிவுல் மட்டுமே உள்ளது. உங்கள் கூகிள் கிரோமில், ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அந்த வேளையில் தமிழில் எழுதியவர்கள் சொற்ப்பம். இன்று வாய்ப்புக்கள் அதிகம், எளிதான பல வழிகள் உண்டு. நான் மதிக்கும் ஒரு எழுத்தாளார், கூகிள் dictation மூலம், (ஆளே இல்லாமல்) அசால்ட்டா கட்டுரைகள் புனைகிறார். முன் அவருக்கு dictation எடுக்க ஒரு ஆளும், தட்டச்சு செய்ய ஒரு ஆளும் தேவை. திருத்தங்கள் அவரே செய்வார் அன்றும் இன்றும்.
இன்று நாமும் ரவுடிதான் என்ற முறையில், வழக்கத்துடன் வழுவி NHM writer கணினியில், செல்பேசியில் இரண்டு வசதிகள் : கூகிள் phonetic தமிழ், கூகிள் கையெழுத்து. கூகிளிடம் பேசி எழுத்து வடிவில் பார்ப்பதில் ஏனோ உவப்பில்லை. அதேபோல தான் வாட்சப் ஒலிச் செய்திகள். (வயசாகிவிட்டதோ!)
பலர் எழுத வந்தாலும் இரண்டு குறைகள் தொடர்கிறது. தன் குறையை தானே காண்பது தன்மானம். முதலாவது நம்முடனே (கூடவே) பிறந்தது: எழுத்துப் பிழைகள். போதிய பயிற்சியின்மையும், ஆசிரியர் வழிக்காட்டுதலும் இல்லாதது காரணம். இதனை கொஞ்சம் தயவு பண்ணி, மன்னித்து மறக்கலாம், காலப்போக்கில் மறையும் என்ற நம்பிக்கையில்.
இரண்டாவது : வன்மம். நேராக யாரிடமும் காட்ட முடியாத வெறித்தனத்தை, மனக்குப்பைகளை, அடையாளமில்லாமல் இணையத்தில் கொட்டுவது. பல கெட்ட வார்த்தைகள், வசைச் சொற்கள் சமூக இணையத்தில் இயல்பாக பயன்படுத்த்ப்படுகிறது. இந்த மன அமைப்பும், சகிப்புத்தன்மையும் எங்கிருந்து வந்ததோ? பண்பான விவாத சூழல் மறைந்துவிட்டது என்பது மிகையில்லை. சில மாதங்களுக்கு முன்: நீங்கள் இன்ன ஜாதி, அதனால் தான் இப்படி எல்லாம் கருத்து சொல்லுறீங்க என்றார் ஒருவர். அவரை அமைதியாக பிளாக் செய்தேன். டிவிட்டர் கதை இது. முகநூலில், ஒரு அரசியல் விவாதத்தில் இறங்கி, சண்டை போட்டு, நேரவிரையம் தான் நடந்தது. பெரிய அண்ணன் ஒருவரிடம் சொல்ல, அவரோ: நான் இது எல்லாம் பார்த்து, அடங்கி பழகாலமாச்சுப்பா என்றார். ஒதுங்குவதே உத்தமம். இன்றும் சில பதிவுகளை பார்க்கும் போது கை துடிக்கும், ஆனால் மனதில் ஒரு மணி அடிக்கும்: சும்மா இரு, சுகம் காணலாம்.