~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘உணர்வுகள்’ Category

கம் கும் ஜம்.

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௫ (125)

சமீபத்தில் தினமும் எழுதுவது பற்றி காரசாரமான பல விவாதங்கள் முகநூலில் சுழன்றது. 10-20 என்று தினப்படி எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நறுக்கென நாலு வரிகளில் கவிதை எழுதி, ட்விட்டரில் டிரென்ட் ஆக்குபவர்களும் உண்டு. ஆடிக்கும் அம்மாவாசைக்கும் தூசி தட்டும் ரகம் ஒரு ஜாதி. புரியாததை எழுதி புலவர் பெயர் வாங்கும் பலர்.

என் போல் சோம்பேறிகளுக்கு எந்த நியதியும், தர்மமும், வெக்கமுமில்லை. புதியதொரு நண்பருடன், இணைய தமிழ் பற்றி ஒரு நீண்ட உரையாடல், எதேர்ச்சியாக நிகழ்ந்தது. பேசும் சுவாரஸியத்தில் நானும் வலையில் எழுதுவேன் (எழுதினேன்) என்று சொல்ல, அவர் இணைப்பை கேட்க, நான் எழுதி பல காலமாச்சு என்று நெழிய… இந்த பதிவும் பிறந்தது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர இலக்கிய வாசகனாக மாற முயற்சி செய்த நான், எழுதவும் முற்ப்பட்டேன். என்ன என்னமோ எழுதி உள்ளேன், இன்று திரும்பி வாசித்து பார்த்தால் சிரிப்பி தான் மிச்சம். முதிர்சியின்மை வெளிச்சமாக தெரியும் எழுத்துக்கள். சொல்லித் தர ஆள் இல்லாத குறை. குரு மூலம் செல்லும் பாதையே செம்மையானது. ஒரு ஏகலைவன் தான் உள்ளான். மீதி போர் வீரர்கள் அனைவரும் முறையே பயின்றவர்கள். தெளிவு குரு உரு சிந்தித்தல் என்கிறது திருமந்திரம். குருவாய் வருவாய் குகனே. நிற்க.

அன்று நான் எழுத பயன்படுத்தியது Google Transliteration input tool for Desktop. இன்று அது இணைய வடிவுல் மட்டுமே உள்ளது. உங்கள் கூகிள் கிரோமில், ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அந்த வேளையில் தமிழில் எழுதியவர்கள் சொற்ப்பம். இன்று வாய்ப்புக்கள் அதிகம், எளிதான பல வழிகள் உண்டு. நான் மதிக்கும் ஒரு எழுத்தாளார், கூகிள் dictation மூலம், (ஆளே இல்லாமல்) அசால்ட்டா கட்டுரைகள் புனைகிறார். முன் அவருக்கு dictation எடுக்க ஒரு ஆளும், தட்டச்சு செய்ய ஒரு ஆளும் தேவை. திருத்தங்கள் அவரே செய்வார் அன்றும் இன்றும்.

இன்று நாமும் ரவுடிதான் என்ற முறையில், வழக்கத்துடன் வழுவி NHM writer கணினியில், செல்பேசியில் இரண்டு வசதிகள் : கூகிள் phonetic தமிழ், கூகிள் கையெழுத்து. கூகிளிடம் பேசி எழுத்து வடிவில் பார்ப்பதில் ஏனோ உவப்பில்லை. அதேபோல தான் வாட்சப் ஒலிச் செய்திகள். (வயசாகிவிட்டதோ!)

பலர் எழுத வந்தாலும் இரண்டு குறைகள் தொடர்கிறது. தன் குறையை தானே காண்பது தன்மானம். முதலாவது நம்முடனே (கூடவே) பிறந்தது: எழுத்துப் பிழைகள். போதிய பயிற்சியின்மையும், ஆசிரியர் வழிக்காட்டுதலும் இல்லாதது காரணம். இதனை கொஞ்சம் தயவு பண்ணி, மன்னித்து மறக்கலாம், காலப்போக்கில் மறையும் என்ற நம்பிக்கையில்.

இரண்டாவது : வன்மம். நேராக யாரிடமும் காட்ட முடியாத வெறித்தனத்தை, மனக்குப்பைகளை, அடையாளமில்லாமல் இணையத்தில் கொட்டுவது. பல கெட்ட வார்த்தைகள், வசைச் சொற்கள் சமூக இணையத்தில் இயல்பாக பயன்படுத்த்ப்படுகிறது. இந்த மன அமைப்பும், சகிப்புத்தன்மையும் எங்கிருந்து வந்ததோ? பண்பான விவாத சூழல் மறைந்துவிட்டது என்பது மிகையில்லை. சில மாதங்களுக்கு முன்: நீங்கள் இன்ன ஜாதி, அதனால் தான் இப்படி எல்லாம் கருத்து சொல்லுறீங்க என்றார் ஒருவர். அவரை அமைதியாக பிளாக் செய்தேன். டிவிட்டர் கதை இது. முகநூலில், ஒரு அரசியல் விவாதத்தில் இறங்கி, சண்டை போட்டு, நேரவிரையம் தான் நடந்தது. பெரிய அண்ணன் ஒருவரிடம் சொல்ல, அவரோ: நான் இது எல்லாம் பார்த்து, அடங்கி பழகாலமாச்சுப்பா என்றார். ஒதுங்குவதே உத்தமம். இன்றும் சில பதிவுகளை பார்க்கும் போது கை துடிக்கும், ஆனால் மனதில் ஒரு மணி அடிக்கும்: சும்மா இரு, சுகம் காணலாம்.

கேட்டல்

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௧ (121)

பேசுவதில் மனிதன் பெரும் சுகம் கொள்கிறான். நாங்கள் சில நண்பர்கள் கூகிள் மீட் தயவில் கலந்து பேசினோம். இந்த ஊரடங்கு காலத்தில் பல வேறு பகுதிகளில் இருப்பவர்கள் சேர்ந்து பார்ப்பது சிரமம். நிகர் நிலையில் நம் இணையம் கை கொடுக்கிறது.

எல்லோருக்கும் சொல்ல என்ன என்னமோ இருக்கிறது. கேட்க்க பல கேள்விள் உண்டு, விஷயங்களை அறிந்துக் கொள்ள / பகிர ஆர்வம் இருக்கிறது. விவாதிப்பதில் ஒரு திருப்தியும் தெளிவும் சுகமும் பிறக்கிறது. கேட்டல் என்னும் தவத்ததை செய்பவர்கள் சிலரே. தவளைகள் கத்தினாலும் தெம்பாக கேட்கும் திறன் இவர்களுக்கு எங்கிருந்து வந்ததோ! என் நண்பன் ஒருவன் இதில் பலே கில்லாடி. இதற்கு ஒரு படி மேலும் அவன் செல்லுவான்: பிறர் விளையாடுவதை ரசித்து கவனிப்பான், அது கால்ப்பந்தாகட்டும், பப்ஜி ஆகட்டும். அதில் சேரும் ஆசை அவனுக்கு எழாது, காண்பதில் மகிழ்ச்சி. பாக்யம். என்னமோ போங்க! இது நிற்க.

மனிதர்கள் மட்டும் தான் பேசிகிறார்களா? பேசத் துடிக்கிறார்களா? இல்லை. நாம் பேசுவதை விட கேட்டல் அதிகம். மரம் பேசுகிறது, காற்று கிசுகிசுக்கிறது, திரைப்படம் ஏதோ சொல்கிறது, மொழி இல்லாமல் இசை உரையாடுகிறது, வீட்டு விலங்குகளின் பாஷை புரிகிறது (சிலருக்கு), இயற்க்கை செய்தி சொல்லுகிறது, சம்பவங்கள் பாடம் தருகிறது, உறவுகள் அன்பையும் வம்பையும் பேசித் தள்ளுகிறது, காலம் விரசாக ஓடி ஓடி தத்துவங்களை உருவாக்குகிறது. 1. இந்த பேச்சுகளை நாம் கூர்ந்து கேட்டலின் விகிதத்தில் – நம் மூளை செப்பனிடப்படுகிறது, உள்ளம் முதிர்ச்சி அடைகிறது. 2. இத்தனையும் கேட்கும் மனிதன், தன் பங்கு வரும் பொழுதில் பேசி தள்ளுகிறான். நியாயம் தானே. காணாததைக் கண்டவன் போல.

சும்மாவா வள்ளுவ நாயனார் சொன்னார்: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

கண், மூக்கு, செவி, வாய், மெய். இதில் உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை வாங்குவது செவி மட்டும். கண் சென்று பார்க்க வேண்டும், மூக்கு முகர வேண்டும், வாயில் உணவைப் போட்டு ருசிக்க வேண்டும், உணரும் மெய் அது போலே. ஆனால் காது இருந்த இடத்திலிருந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, இயங்கும் எஜமான். எல்லாம் காதில் வந்து விழும்.

திரையை மணி நேரங்கள் நோக்கினால் கண் வலிக்கும், பேசிக் கொண்டே இருந்தால் வாய் வலிக்கும், அளவுக்கு மீறினால் வாய் கசக்கும், ரொம்ப குளிரினாலே வெப்பத்தாலோ மெய் தாங்கா. ஆனால் காது வலிக்காது. அது ராஜ இந்திரியம்.

(இன்னும் எழுதலாம்…)

உயிர்

மோகன் டீயுடன் சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பருகினான். பதினெட்டாம் மாடி, பால்கனி. காலை ஆறு மணி, சில்லென காற்று, நீண்ட வானத்தின் நடுவில் சிவப்பு நிற சூரிய உதயம், அம்மாவின் நினைவை, அவள் விசால நெத்தியில் மிக நேர்த்தியாக குங்குமம் வைத்திருப்பாள்.

சித்தி அனுப்பிய வாட்சப் குறுச்செய்தியை மீண்டும் வாசித்தான். பரவசம் பொங்கியது. சோகம் தொண்டைய கவ்வியது. அம்மா அவளிடம் சொன்னாளாம்: அவனது காலை காபி தான், என்னை கடைசி பத்து ஆண்டுகள் உயிருடன் வைத்திருத்த அமிர்தமான மருந்து.

இந்த பழக்கம் என்று ஆரம்பித்தது என்று நினைவில் இல்லை. குறைந்து இருபத்தி ஐந்து வருடங்களாகியிருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அம்மாவுக்கு காபி எனக்கு டீ. ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து மெல்ல மெல்ல சுவைத்து அருந்துவோம். முதலில் எழுபவர் பாணத்தை அன்புடன் தயார் செய்து ஆர்வத்துடன் காத்திருப்போம். எத்தனை எத்தனை பரிமாற்றங்கள். அரசியல், சினிமா, விளையாட்டு, கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவம், கேலி, கிண்டல், புரணி, முக்கிய முடிவுகள், அறிவுரைகள், செல்ல கோபங்கள்…. அம்மா எனக்காக பார்த்த பெண்னைப் பற்றி சொன்னது அத்தகு ஒரு பொழுதில், அவள் பாட்டியாக போகிறாள் என்று இன்பம் தந்தது அப்படி ஒரு வேளையில், இன்னும் இன்னும் அடுக்கலாம்.

வேலை மாற்றல் காரணமாக நான் பம்பாய் வந்து எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டது, ஆனால் எங்கள் அதிகாலை பந்தம் தொடர்ந்தது. முதலில் தொலைபேசி மூலம் பின் இணய வழி. முதலில் அவள் வெகுவாக குழம்பினாலும், எளிதில் விடியோ கால் மார்கத்தை கற்று தேர்ந்தாள். எது எப்படி போனாலும், நாங்கள் இருவரும் ஒரே நேர் கோட்டில் தேனீர் அருந்தினோம். வெயில், மழை, பணி, பிணி எல்லாம் எங்களை அசைக்காமல் அனுபவிக்கவிட்டது அவன் செயல்.

இன்றும் மனம் அவள் குரலுக்காக தேடுகிறது, அந்த அன்பின் கதகப்பை நாடுகிறது. உனக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், எனக்கு நீ அம்மா ஒருவளே. அவள் வானில் கரைந்து நாளொன்று ஓடிவிட்டாலும், தொலைபேசி அகராதியிலிருத்து அவள் பெயரை அழிக்க விருப்பமில்லை. அந்த அதிகாலை அழைப்பு, அரவணைப்பு மீண்டும் வராதா என்று என் கைபேசியை பார்த்து ஏங்கினேன், அம்மவின் அழகான முகம் சிரித்தது.

(கோராவில் ஒரு சம்பவம் படித்தேன், அதன் தாக்கம் இந்த கதை)

நாற்சத்திக் கூவல் – ௧௨௦ (120)
இன்னும் எழுதலாம்….

ஏற்றம்

நாற்சந்திக் கூவல் – ௧௧௮ (118)

யார் பெரியவர் அப்பாவா? அம்மாவா ? பட்டிமண்டப மேடைகள் பல கண்ட தலைப்பு. அம்மாதான், கொஞ்சம் சிந்தித்தால் தெரியும். அவள் நம்மை சுமந்தது மட்டுமே போதும், போட்டியில்லா வெற்றி.

பெண்னுக்கான ஏற்றம் என்றும் நிறைந்த நாடு இந்தியா. பரமசிவன் தனது பாதியை அம்மைக்கு கொடுத்தார். தமிழில் பண் இசையை, பிள்ளையார் சுழிப் போட்டு பாடி ஆரம்பித்தவர், புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார். அந்த பிள்ளையாருக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும் துதிகள் பாடி நமக்கு பாடம் சொன்ன ஒளவைப் பாட்டி ஒரு பக்கம்.

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்ற திவ்ய தேசம் உண்டு. ராஜா ராமரின் மூதாதையர், அடைக்கலப் புறாவிற்க்காக தன் உடலை ஈந்த சிபி சக்கிரவர்த்தி கட்டியக் கோவில். அங்கு செந்தாமாரைக்கண்ணன், பங்கஜ வள்ளித்தாயார் சமேதராக உள்ளார். நாழி கேட்டான் வாசல் பிரசித்தம். பெருமால் ஊர் சுற்றி விட்டு வருவாராம். தாயார் ஏன் தாமதம்? இப்ப நேரம் என்ன? என்று கேட்ப்பாளாம். தாயாருக்கு தான் ஏற்றம். அவள் படிதாண்டா பத்தினியாக கொலு வீற்றிருக்கிறாள்.

பெண் விடுதலைக்காக இராமசாமி என்பர் வித்திட்டாராம். எதையும் படிக்காமல் பிதற்றும் மாக்கள் நிறைந்த உலகம் இது. திலகவதியார் வாழ்க்கையை படியுங்கள் – அப்பர் பெருமானின் அக்கா. கனவரை சிறு வயதில் இழந்தவர். பல காலம் சிவ சேவை செய்தவர், அப்பரை சிவ வழி நடத்தியவர். சைவ கோவில்கள் அனைத்திலும் அவர் சிலை உண்டு, அறுபத்தி மூவரில் ஒருவர்.

மங்கையர்கரிசியாரை தெரியுமா ? நின்ற சீர் நெடுமாறப்பாண்டியனின் மனைவி. மதுரைக்கு சம்பந்தரை அழைத்து வந்த பெருமைக்கு உரியவர். மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம், பதிகம் பாட சம்பந்த பிள்ளையார் ஆர்ம்பித்தது – சொக்கனயோ, அங்கையர் கன்னியையோ அல்ல, மங்கையர்கரிசியாரை பாடினார். அது இன்று தேவராம உள்ளது. ஓதப்படுகிறது. பூசிக்கப்படுகிறது.

இராமாயண காவியத்தை எழுதிய ஆதி கவியான வால்மீகி அதற்கு மூன்று பெயர்கள் சூட்டினார்: இராமனின் கதை, புளச்திய வதம் (இராவண வதம்), சீதாயாஸ் மஹத் சரிதம் – சீதையின் மகத்தான கதை.

(இன்னும் எழுதலாம்…)

தெளிவு

நாற்சந்திக் கூவல் – ௧௧௭ (117)

யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை.

நம்பினார் கெடுவதில்லை என்கிறது பழமொழி. இன்று ஒரு (ஆங்கில) வாசகம் படித்தேன்: வீட்டை பாதுகாக்க கதைவைப் போட்டான், கதவைக் காக்க பூட்டு வந்தது, அதையும் காக்க பணியாள் வந்தான், அவனையும் கண்கானிக்க கேமரா வந்தது, டும் டும் டும்!

சுஜாதாவின் பத்து கட்டளைகளில் ஒன்று: எதன் மீதாவது நம்பிக்கை வை, அது இறைவன், இயற்க்கை, உன் உழைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் அதிகம் நம்பி செய்யும் காரியம்: தூங்கினால் நிச்சியம் எழுவோம் என்று 150% நம்புகிறோம். பல தடவை பலிக்கிறது, கடைசி ஒரு முறை தவிர.

நம்பிக்கை இல்லாதா மனிதனே இல்லை, விகிதாசாரங்கள் மாறுகிறது. பஞ்சத்தில் இருந்த ஊரில், மழைக்கான பிரார்ததனை கூட்டத்துக்கு குடையுடன் வந்த சிறுமியின் மதிப்பு : 101%.

எதையும் நம்பமுடியாது என்பதை நிரூபிக்க நம் சமூக வலைத்தளங்களும் வாட்சப்-பும் போதும். எத்தனை எத்தனை கட்டுக் கதைகள். அதை நாமும் பிறருக்கு கண் மூடித்தனமாக மீண்டும் அனுப்புவது பெரும் முட்டாள்த்தனம். ஒரு நொடி யோசியுங்கள், சரிப்பாருங்கள், நீங்கள் அதை அனுப்பும் போது ஒரு சொல்லப்படாத செய்தி அதனுடன் சேர்ந்து செல்கிறது: அதை நான் நம்புகிறேன், ஆமோதிக்கிறேன், ரசிக்கிறேன், விரும்புகிறேன். நீங்கள் அதை வெறுப்பீர்களேயானால் நிச்சியம் அவதாணித்து ஒரு வரி எழுதியிருப்பீர்கள். விழிப்புடன் பகிருங்கள், அவர்கள் காலமும் பொன்னானது.

நம் கை எப்படி வளகிறதோ அதே போல தான் நம்பிக்கையும் வளர்கிறது, விதையிலிருந்து விருக்‌ஷம் போல. உடையும் சமயத்திலும் அதே கதை தான்: ”பட்”, கண் சிமிட்டும் ஒரு நொடிப் பொழுதில். குறிப்பாக உறவுகளில் இதனை வெளிச்சமாக காணலாம்.

வள்ளுவ நாயனார் ”தெரிந்து தெளிதல்” காண்டத்தில் மனித நம்பிக்கை பற்றி விரிக்கிறார் 500 – 510 – தகுதியுடையாரை ஆராய்ந்து, நம்பிக்கை வைத்தல். அவர் தான் நம்பிக்கையை தெளிவு என்று அழைக்கிறார். (தலைப்பு விளக்கம்)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
திருக்குறள் 510

(இன்னும் எழுதலாம்….)

வழி

பல வருடங்களாக இருட்டு மண்டிக்கிடக்கும் ஒரு அறையில், ஒரு சிறு தீக்குச்சியை பற்றவைத்தால் பிரகாசம் பொங்கும், நொடியில், விடியல் பிறக்கும். வாழ்க்கை என்னும் திக்கு தெரியாத கடலில் ஓடமென வந்து, நம்மை சுமந்து, நல் வழிப்படுத்தி, இலக்கை அடைய செய்பவர் குரு.

இன்று வேத வியாசரின் பிறந்தநாள். குரு பூர்ணிமா. வியாச பீடங்கள், குருமார்கள் பலர் உள்ளனர். அவர் பெயர் கிருஷ்ண துவைப்பாயன வியாசர். வேதங்களை பகுத்து, நெரிமுறைப் படுத்தியவர். பின்னர் மகாபாரதம் எழுதினார். அவரை ஆதி நிமித்தமாகக் கொண்டு அனைத்து குருமார்களையும் வணங்குவது மரபு.

குரு : கு – அறியாமை ரு- விலக்குபவர்.

புத்த பகவான் நிர்வாணம் பெற்ற பின்பு, சாரநாத கட்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்று தான் தனது முதல் தத்துவப் பிரசார சொற்பொழிவை நிகழ்த்தினார் என்கிறது வரலாறு. ஜைனர்கள் / நேபாள மக்கள் இதனை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடுகின்றனர்.

இறைவனே முதல் குரு என்பது ஒரு ஐதீகம். கடவுள் – நம் உள் கிடப்பவர் – மனசாட்சி – நமக்கு என்றும் குருவாக இருந்து வழி காட்டுகிறார். ஆனாலும் நாம் வளர, பல குருவின் கைகளை பற்றி ஊன்றி வந்துள்ளோம்: அம்மா, அப்பா, குடும்பம், நண்பர்கள், எதிரிகள், பிராணிகள், பொருட்கள், கூகிள், நம்மை கட்ந்து செல்லும் சம்பவங்கள் / மனிதர்கள், வாசிப்பு, எழுத்து, எண்கள், இயற்க்கை, செயற்க்கை, கடவுள், இறைவன், ஆன்மீக குரு…

ஒரு சமஸ்கிர சுலோகம் சொல்கிறது: தக்‌ஷினாமூர்த்தி பகவானில் ஆரம்பிக்கும் இந்த பர்ம்பரை, ஆதி சங்கரை நடுவாக கொண்டு இன்று பல கிளைகள் பர்ப்பி செழித்து தழைத்துள்ளது.

காலம் நமக்கான குருவாகிறது, சரியான குருமார்களை கொணர்ந்து சேர்க்கிறது. என்ன புரண்டாலும் அடித்து சொல்லிக் தருகிறது, சிரித்தும் சாதிக்கிறது.

கற்றல் கடலில், முத்து குளிக்கு, சத்தான குரு, வித்தாக வேண்டும்.

தெளிவு குருவின் திருமேனி காண்ட்ல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.
– 27 திருமூலர் திருமந்திரம்.

குறிச்சொல் மேகம்